පුවත්
"உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் "தலைமுறையை காத்த தலைமுறையை காப்போம்" எனும் தொனிப்பொருளில் முதியோர் வார நிகழ்வுகள் 2025.10.03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய இந்நிகழ்வின் அதிதிகளாக பிரதேசத்தின் சிறுவர்களும் முதியோர்களும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அத்தோடு சிறுவர்களின் பல்வேறான கலைநிகழ்ச்சிகளும் முதியோர்களின் ஆடல் பாடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







National Achievements of Social Security Board - 2024


இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் கடந்த 2025.10.16 ஆம் திகதி வியாழக்கிழமையன்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட அடைவை அடைந்தமைக்காக பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் சமூக ஓய்வூதிய திட்ட விடய உத்தியோகத்தர் உள்ளிட்டோர் சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு 2025.11.03 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


'Ratama Ekata' - ரட்டம எகட்ட தேசிய செயல்பாட்டு அங்குரார்ப்பண விழாவின் சத்தியப்பிரமாண நிகழ்வு 2025.10.30 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 10.00 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வலிகாட்டுதலின் கீழ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது எமது தாய்நாட்டிலிருந்து விஷ போதைப்பொருட்களின் அச்சுறுத்தல் முற்று முழுதாக ஒழிக்கப்படும் வரை கைவிடப்படதாத தேசிய பொறுப்பொன்றாக கருதி செயல்படுவோம் என்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் உறுதி செய்து சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசால அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது 2025.11.04 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மு.ப 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
"அமைதியான, ஒழுக்கமான சிறந்த மனிதர்களைக் கொண்ட புனித தேசத்தினை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச கலைஞர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பல இடம்பெற்றிருந்ததுடன் கலைஞர் கௌரவிப்பு, பிரதேச இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கல், கலைநிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


























