පුවත්
"முழுநாடும் ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் 2026.03.04 ஆம் திகதி புதன்கிழமையன்று அம்பிளாந்துறை மற்றும் கொக்கட்டிசோலை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு நடத்தப்பட்டதுடன் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2026.03.05 ஆம் திகதி வியாழக்கிழமையன்று அம்பிளாந்துறை கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து வருகை தந்த சகோதர இன இளைஞர் யுவதிகள் வரவேற்கப்பட்டதுடன் இவர்கள் எமது பகுதியில் 5 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவுள்ளனர்.

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகமும் ஆட்பதிவு திணைக்களமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை 2026.03.04 மற்றும் 2026.03.05 ஆகிய இரு தினங்களில் பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் மாவடிமுன்மாரி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளத் தவறிய 75 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான வசதியளிக்கப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்விற்கான அனுசரணையினை Brandina நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவுளியாமடு பிரதேசத்தில் நீண்ட காலமாக அடிப்படை தரநியமங்கள் அற்ற நிலையில் இயங்கி வந்த கெவுளியாமடு சத்துட்டுஉயன பாலர் பாடசாலைக்கு புதிய தரநியமங்களுடன் கூடிய மாதிரி பாலர் பாடசாலையை அமைக்கும் பொருட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திரு S.சுதாகர் அவர்களது தலைமையில் 05.03.2026 வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் S.பார்த்தீபன், மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் V.முரளிதரன், பிரதே செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் G.உமாறமணன், மங்களகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மங்களகம மகா வித்தியாலய அதிபர் சிவில் பாதுகாப் படைகளின் மங்களகம பிரதேச பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச பொதுமக்கள் குழந்தைகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஹேமாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள இந்த மாதிரி பாலர் பாடசாலை அப்பகுதியில் உள்ள முன்பிள்ளைகளுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை வழங்கும்.
நீண்டகாலமாக பெரும் வளப்பற்றாக்குறையுடனும் தர நியமங்களை பேணி கல்விச் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல முடியாத சூழலில் அப்பாலர் பாடசாலை இயங்கி வந்தது.
இப்புதிய பாலர் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டு வெகு விரைவில் அப்பிரதேச குழந்தைகளுக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அது எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளது உடல் மற்றும் உளரீதியான வளர்ச்சியை மேம்படுத்தி ஒரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க பெரும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2026.02.10 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களது தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.















